ஊரடங்கு வாகன தணிக்கையின் போது விதிகளை மீறி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்ததால் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் காவல்துறையினர் வாகனதணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துமீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அது போல விதிகளை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் போது பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேத்துப்பட்டு சிக்னலில் பணி செய்யவிடாமல் தடுத்த பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இன்று இதே போல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. பிராட்வே பாரதி கல்லூரி சிக்னல் அருகில் முத்தியால்பேட்டை போலீசார் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதனை முத்தியால் பேட்டை சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் முக கவசம் அணியவில்லை, இ-பதிவு இல்லாதால் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதனால் ஆட்டோ ஓட்டி வந்தவர் நடவடிக்கை எடுத்த பெண் உதவி ஆய்வாளருடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில், காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த அவர், தனக்கு அமைச்சரைத் தெரியும் எனவும், அவரை வரச் சொல்லவா எனக்கேட்டு தகாத வார்த்தைகளால் பேசினார். காவல்துறையினர் முகக்கவசம் அணியச் சொல்லியும் அவர் அணியவில்லை.
இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பாக முத்தியால் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த ஆட்டோ ஓட்டுனர் மண்ணடியைச் சேர்ந்த அஸ்கர் அலி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் முதியோருக்கான இ- பதிவை எடுத்து வைத்து கொண்டு பயணிகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் முத்தியால் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி ஆட்டோ ஓட்டுனர் அஸ்கர் அலி மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் அஸ்கர் அலியை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.