குற்றம்

தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது

kaleelrahman

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் சேகர் சாந்தி தம்பதியின் மகன். சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கபடாத நிலையில் சிறுவன் வீட்டின் அருகில் உள்ள தெருக்களில் வசிக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து அடிக்கடி விளையாட செல்வது வழக்கம்.


இந்நிலையில் நேற்று முன்தினம் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த சிறுவன் அழுதுகொண்டிருந்தான். அப்போது அவனின் பெற்றோர் விசாரித்ததில், சிறுவனது மர்ம உறுப்பில் காயம் இருப்பதாக கூறியுள்ளான். இதனையடுத்து சிறுவனை, பெற்றோர் சங்கரன்கோவில் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் அவனிடம் விசாரித்தபோது, தன்னுடன் விளையாட வரும் சிறுவர்கள் தெருவில் ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பல மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான். சம்பவம் அறிந்து அதிர்ச்சியுற்ற அவனது தாய் சாந்தி, இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் இசக்கிராஜ் (16), கருணாகரன் என்பவரின் மகன் சங்கரநாராயணன் (14), முத்துப்பாண்டியின் மகன் தமிழரசு (12), முருகனின் மகன் சதீஷ் (13) ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருநெல்வேலி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.