ஹவாலா பணம் பறிமுதல் - இருவர் கைது pt desk
குற்றம்

தென்காசி | ரகசிய தகவலை அடுத்து ரயிலில் சோதனை - ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - இருவர் கைது

தமிழக, கேரளா எல்லையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் - சென்னையிலிருந்து கொல்லம் சென்ற ரயிலில் ஹவாலா பணம் கடத்திச் சென்ற இருவர் கைது செய்ப்பட்டனர்.

PT WEB

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக புனலூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தமிழக பகுதியில் உள்ள புனலூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அதிலிருந்த இரண்டு நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது, அதில், கட்டு கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ.34 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.