செய்தியாளர்: இ.முத்துப்பாண்டியன்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - தென்காசி சாலையில் போலீசார், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த 2 மினி லாரிகளை மடக்கி சோதனையிட்ட போது, அதில் 17 மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், புகையிலை பொருகள்களைக் கொண்டு வந்தவர்கள் கீழப்பாவூர் முருகன், அவரது சகோதரர் செல்வன், அயன் குறும்பலாப்பேரியைச் சேர்ந்த ரத்தினசாமி என்ற மகேஷ், நவீன்குமார் ஆகியோர் என்பதும், இவர்கள் கேரளத்தில் இருந்து மொத்தமாக புகையிலை பொருள்களை வாங்கி வந்து தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விநியோகம் செய்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த ஆலங்குளம் போலீசார், அவர்களிடமிருந்து 2 மினி லாரி, 2 பைக் மற்றும் சுமார் 250 கிலோ புகையிலை பொருகள்களை பறிமுதல் செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.