சத்தீஸ்கர் சம்பவம்
சத்தீஸ்கர் சம்பவம் Freepik
குற்றம்

சத்தீஸ்கர்: சகோதரிகள் பாலியல் வன்கொடுமை; பாஜக பிரமுகரின் மகன் உள்ளிட்ட 10 பேர் கைது!

Prakash J

1சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர், ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடிவிட்டு, கடந்த 31-ஆம் தேதி ஆண் நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பன்சோஜ் கிராமத்தில் அவர்களை மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை அந்தக் கும்பல் பறித்துள்ளது. அப்போது மேலும் 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது.

இதன்பின் அந்த சகோதரிகளை தனிமையான இடத்திற்கு கொண்டு சென்ற அந்த கும்பல், அவர்களைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த சம்பவம் அனைத்தும் அந்த சகோதரிகளின் ஆண் நண்பர் கண்முன்னேயே நடந்துள்ளது. அவரும் இந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இதன்பின் அந்த கும்பல் அவர்களை விட்டு விட்டுத் தப்பிச் சென்றது. பாதிக்கப்பட்ட சகோதரிகளில் ஒருவருக்கு 19 வயது என்றும் மற்றொருவருக்கு 16 வயது என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார், வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறி செய்தது பூனம் தாக்கூர் என்பவரது கும்பல் எனத் தெரிய வந்தது. பூனம் தாக்கூர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து இரு சகோதரிகளையும் பாலியல் வன்கொடுமை செய்த பூனம் தாக்கூர் உள்பட 10 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். கொலை, பாலியல் வழக்குகளில் தொடர்புடைய பூனம் தாக்கூரின் தந்தை லக்ஷ்மி நாராயண் சிங், உள்ளூர் பாஜக தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.