தெலங்கானா மாநிலத்தில் 5 கோடி ரூபாய் மோசடி செய்து காரைக்குடியில் மறைந்திருந்த நபரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்ஆர்.தேவர். இவர், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், 5 மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சூழியில் தற்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை எதிர்த்து, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் ஐதராபாத்தில் செயல்பட்டு வந்த காமினி தேனி என்ற பிரபல மருத்துவமனையின் உரிமையாளர் லட்சுமி நாராயணன் என்பவரிடம் கடன் பெற்றுத் தருவதாக 5 கோடி ரூபாயை பெற்றுள்ளார். இதையடுத்து கடன் ஏதும் பெற்றுத்தராத நிலையில், லட்சுமி நாராயணன் தெலங்கானா போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், விசாரணையில் இறங்கிய தெலங்கானா போலீசார்,இன்று அதிகாலை காரைக்குடி அண்ணாநகர் வீட்டில் பதுங்கியிருந்த எஸ்ஆர்.தேவரை கைது செய்து காரைக்குடி வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்பு காரைக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தி மேல் விசாரணைக்காக தெலங்கானாவிற்கு அழைத்துச்சென்றனர்.