குற்றம்

ஓடும் பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: பேருந்து ஊழியர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

JustinDurai
(கோப்பு புகைப்படம்)
ஓடும் பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியின் பதர்பூர் பகுதியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் பகுதிக்கு செல்லும் தனியார் இரட்டை அடுக்கு ஏசி பேருந்து ஒன்று, கடந்த திங்கள்கிழமை அன்று இரவு 11 அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பதர்பூரிலிருந்து கிளம்பியது. இப்பேருந்தில் 30 வயது பெண் ஒருவர் தனது 14 வயது மகள் மற்றும் அவரது சகோதரியின் 18 வயது மகளுடன் பேருந்தின் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது பேருந்து ஊழியர்களான பப்லு மற்றும் அன்ஷு ஆகிய இருவரும், அப்பெண்ணின் மகளிடம் கேபினில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக் கொண்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பேருந்து ஓட்டுநர் மற்றும் சக பயணிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றது. இதையடுத்து அந்தப் பெண் தனது உறவினர்களிடம் செல்போன் மூலமாக தகவல் தெரிவிக்கவே, பப்லு மற்றும் அன்ஷு இருவரும் பேருந்திலிருந்து இறங்கி தப்பியோடினர்.
இதையடுத்து உத்தரப்பிரதேசத்தின் ஷிகோஹாபாத் காவல் நிலைய போலீசார் பேருந்தை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். குற்றஞ்சாட்டப்பட்ட பப்லு மற்றும் அன்ஷு இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.