குற்றம்

‘சமூகவலைத்தள வன்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்’ - முதலமைச்சர் அறிவுறுத்தல்

சங்கீதா

சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில் பதிவிடுவோர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றங்களை குறைப்பதைவிட, அவை நடக்காமல் தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் மதமோதல்களை சிலர் உருவாக்க முயற்சிப்பதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சமூகவலைத்தளத்தை நல்லதுக்கும், கெடுதலுக்கும் கூட பயன்படுத்தலாம் என்றும், ஆனால் வக்கிரமானவர்கள் சமூகவலைத்தளத்தை அழிவுக்கு பயன்படுத்துகின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலிள் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மூலம் நடக்கும் சாதி, மாத வன்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இதற்காக காவல்துறை அதிகாரிகள் தனியாக ஆலோசனை நடத்தி, தம்மிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தொழில் நிறுவனங்களை மிரட்டும் ரவடிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கக் கூடாது என்றும், ரவுடிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.