குற்றம்

கள்ளக்காதல்: தமிழ்ப் பெண் பெங்களூரில் படுகொலை!

Rasus

தமிழக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு ஈஜிபுராவில் வசித்து வந்தவர் பிரியா (25). தமிழகத்தைச் சேர்ந்தவர். கடந்த 24-ம் தேதி இவர் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பிரியா அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். இந் நிலையில், நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியிருப்பதாவது:

பிரியாவின் நிஜ பெயர் ஹொன்னம்மா. இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து பெங்களூர் வந்தார். பணத்துக்காக விபசாரத்தில் ஈடுபட்டார். 

இந்த நிலையில், ஐ.பி.எல். சூதாட்டத்திற்காக, பெங்களூருக்கு அடிக்கடி வந்த நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவருடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதையடுத்து, இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். மகாதேவபுராவில் இருவரும் சேர்ந்து வசித்தபோது பிரியா வேறொருவருடன் நெருங்கி பழகினார். இதையறிந்த மாதேஷ், தகராறில் ஈடுபட்டுள்ளார். மனம் உடைந்த பிரியா, வீட்டை விட்டு வெளியேறி ஈஜிபுராவில் தனியாக குடியேறி உள்ளார். கடந்த 20-ம் தேதி இரவு பிரியா வீட்டுக்கு சென்ற மாதேஷ்,  அவருடன் இருந்துள்ளார். அதிகாலையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடால் பிரியாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பினார். இவ்வாறு போலீசார் கூறினார்கள்.