குடியாத்தத்தில், குழந்தைக்கடத்தலில் ஈடுபடுவதாக பரவும் வதந்தியால் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.
வட மாநிலத்தில் இருந்து வந்துள்ள 50க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளைக் கடத்தி நரபலி கொடுப்பதாக வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரவி வருகிறது. இதனால், வடமாநிலங்களை சேர்ந்தவர்களை பார்த்தால் அடித்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து வருகிறது. இது போன்ற தாக்குதலில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்து 10க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு உள் கூட்ரோடு பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பொதுமக்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதில் மண்டை உடைந்து இரத்தம் கொட்டிய நிலையில் அவர் தவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.