குற்றம்

பெண் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்: 2 வது கணவர் கழுத்தை இறுக்கிக் கொன்றது அம்பலம்

webteam

அம்பத்தூர் அருகே பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இரண்டாவது கணவர் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

சென்னை அம்பத்தூர் கெங்கை நகர், கள்ளிகுப்பத்தில் வசித்து வந்தவர் பவித்ரா (28). .இவர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடத்திற்கு முன்பு முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று புழல் கதிர்வேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில்,வீட்டின் அருகில் மனைவியை இழந்து வசித்து வந்த ராஜா (39) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு,இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெரியபாளைய அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு விழுப்புரத்தில் தங்கி ஒரு துணி கடையில் வேலை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் கள்ளிகுப்பத்துக்கு வந்த இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதையடுத்து பவித்ராவின் நடத்தையில் சந்தேகமடைந்த ராஜாவும் பவித்ராவுக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பவித்ரா வீட்டில் மயங்கிய நிலையில் கிடப்பதாக அவரது பெற்றோருக்கு வீட்டின் அருகே உள்ளவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த பவித்ராவின் தந்தை, பவித்ரா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து அம்பத்தூர் போலீசார் விசாரணையை துவங்கினர். இதற்கிடையே இரண்டாவது கணவர் ராஜா தலைமறைவானதை அடுத்து போலீசாரின் சந்தேகம் ராஜாவின் மீது விழுந்தது.

இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனையில் பவித்ரா கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வந்ததை அடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக இருந்த பவித்ராவின் இரண்டாவது கணவர் ராஜாவை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கொலை குற்றவாளியை துரிதமாக கைது செய்த அம்பத்தூர் தனிப்படை போலீசாரை ஆவடி காவல் ஆணையரக ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.