குற்றம்

ராஜஸ்தான்: வழக்கு தொடுக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; துணை ஆய்வாளர் கைது!

Sinekadhara

ராஜஸ்தானில் வழக்குப்பதிவு செய்ய சென்ற பெண்ணை 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் மாவட்டத்திலுள்ள கேர்லி காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் காவல் நிலையத்துக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கிவந்துள்ளார். மார்ச் 1-ஆம் தேதி ஒரு பெண் தனது கணவர் குடும்பத்தார் அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுக்க வந்திருக்கிறார். புகார் கொடுக்கவந்த அந்த பெண்ணை துணை ஆய்வாளர் அவரது வீட்டிற்கு கூட்டிச்சென்று மார்ச் 1, 2 மற்றும் 3 என மூன்று நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் ஜெய்ப்பூர் பகுதி ஆய்வாளர் ஜெனரல் ஹவாசிங் குமாரியாவை சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து குமாரியா கூறுகையில், அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல மறுத்துவிட்டதாகவும், ஆனால் துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.