குற்றம்

காரைக்குடி: வகுப்புக்கு முறையாக வருமாறு கண்டித்த ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது

Sinekadhara

காரைக்குடி அருகே தொழிற்பயிற்சி பள்ளி ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூரில் இயங்கி வருகிறது அரசு தொழிற்பயிற்சி பள்ளி. இப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் காரைக்குடியைச் சேர்ந்த ராஜா. இவரது வகுப்பு மாணவன் அனுமந்தகுடியை சேர்ந்த ஜாய்சன் வகுப்பிற்கு ஒழுங்காக வருவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ஜாய்சன் செல்போன் கொண்டுவந்ததை ஆசிரியர் ராஜா கண்டித்துள்ளார். இதனால் ஆசிரியரின் மீது மாணவன் கோபமாக இருந்துள்ளான்.

இந்நிலையில், இன்று பள்ளிக்கு வந்த மாணவன், வகுப்பறையில் இருந்த ஆசிரியரை திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திவிட்டு தப்பியோடியுள்ளான். இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியர் படுகாயமடைந்த நிலையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மாணவனை சகமாணவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.