Gold seized
Gold seized pt desk
குற்றம்

இலங்கை டூ இந்தியா: சினிமா பாணியில் சேஸ் செய்த அதிகாரிகள் - 3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

இலங்கையில் இருந்து கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்திவரப்பட உள்ளதாக திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று காலை திருச்சியில் இருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன், மண்டபம், முந்தல் முனை, மற்றும் குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

Gold seized

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்த சொன்ன போது அவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனை அடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். இதையடுத்து அவர் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில், சுமார் 4.634 கிராம் எடையுள்ள 916 தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடத்தல் தங்கத்தையும், ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நம்புராஜன் என்பவரையும் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நம்புராஜனிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

Arrested

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், குறிப்பாக தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால் முந்தல்முனை, வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடத்தல் தங்கம் போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருவது மீனவர்கள் மத்தியிலும் மீனவ கிராம மக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.