குற்றம்

ராமநாதபுரம்: மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் 3 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை

kaleelrahman

ராமநாதபுரத்தில் மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவி மூன்று கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


ராமநாதபுரம் யானைக்கல் வீதியில் வசித்து வருபவர் ரங்கராஜன் (32). இவர் மசாலா ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு நிலை மற்றும் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பதறிப்போன அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டினுள் சென்று பார்த்துள்ளார்.


அப்போது மசாலா ஏஜென்சி மூலம் சென்ற வாரம் வசூல்செய்து வைத்திருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளியாலான குத்துவிளக்கு உள்ளிட்ட மூன்று கிலோ எடையுள்ள பூஜை பொருட்கள் மற்றும் 12 கிராம் தங்கத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்தோடு தடயத்தை மறைக்க மிளகாய் பொடியை தூவிச் சென்றதும் தெரியவந்தது.


இதனைத்தொடர்ந்து அங்கு வந்த பஜார் காவல்துறையினர் உடனடியாக மோப்ப நாய் ஜூலி உதவியுடன் கொள்ளையர்கள் சென்ற வழித்தடத்தை ஆராய்ந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பீரோ மற்றும் கதவுகளில் உள்ள தடயங்களை ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.