குற்றம்

சகோதரர்களிடையே சொத்து பிரிப்பதில் தகராறு - தாயை தடியால் அடித்து கொலை செய்த மகன்

webteam

சின்னசேலம் அருகே சொத்துப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயைத் தடியால் அடித்து கொலை செய்த மகன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலம்மாள். இவருடைய கணவர் முருகேசன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு செல்வி என்ற மகளும், சுரேஷ் மற்றும் வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். வேலம்மாளுக்கு பொது சொத்து சுமார் 1.80 ஏக்கர் நிலம் மற்றும் பொது கடன் 16 லட்சம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொது சொத்து மற்றும் பொது கடனை வேலம்மாள் சரிசமமாக வாய் வழியாக பிரித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடனை அவரது மகன் சுரேஷ்குமார் ஏற்க மறுத்த நிலையில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சகோதர்களான வேல்முருகன், சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி கௌதமி, அவரது மச்சான் கௌதம் ஆகியோர் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறினை தடுக்க முயன்ற தாய் வேலம்மாள் மீது சுரேஷ்குமார் தரப்பினர் தடியால் தாக்கியதில், வேலம்மாள் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மகள் செல்வி அளித்தப் புகாரின் பேரில் சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயை அடித்து கொலை செய்த சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி கௌதமி, அவரது மச்சான் கௌதம் ஆகியோர் மீது கொலை வழக்கும், வேல்முருகன் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்த கீழ்குப்பம் போலீசார் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொது சொத்து மற்றும் பொது கடனை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை தடியால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.