குற்றம்

தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் : சாதுர்யமாக கண்டுபிடித்த போலீஸ்

webteam

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகனை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (80). இவர் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் திட்ட இயக்குனராக பணிபுரிந்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற இவர், வீட்டில் தனிமையாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை பாலகிருஷ்ணன் கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது வீடு முழுவதும் மிளகாய் பொடி தண்ணீரில் கரைத்து பல்வேறு பகுதிகளில் தெளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. யாரோ மிளகாய்ப் பொடியை தூவி பாலகிருஷ்ணனை பலமாக தாக்கிவிட்டு, பின்னர் தலை மற்றும் கை பகுதிகளில் கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீஸார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டபோது, பாலகிருஷ்ணனின் மகன் சேதுராமன் சில நாட்களாக மருந்தகம் வைக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது.

இதனால் தந்தை பாலகிருஷ்ணனை தலையில் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டு, வீடு முழுவதும் மிளகாய் பொடி கரைசலை ஊற்றி விட்டு தப்பி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசாரிடம் யாரோ மர்ம நபர்கள் தன் தந்தையை கொலை செய்து விட்டு தப்பியோடியதாக அவர் நாடகமாடியுள்ளார். அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணைமேற்கொண்டதில், அவரே தந்தையை அடித்து கொலை செய்த உண்மை வெளிவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.