குற்றம்

நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்ற கார் : சந்தேக சோதனையில் சிக்கிய செம்மரங்கள்

webteam

ஆவடி அருகே நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்ற காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில் கடத்தல் செம்மரங்கள் சிக்கின.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியை அடுத்த வீராபுரத்தில் உள்ள மைதானம் ஒன்றில் துண்டு, துண்டாக செம்மரங்கள் கிடப்பதாக டேங்க் பேக்டரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கே கேட்பாரற்று கிடைந்த சுமார் 500 கிலோ செம்மரங்களை கைப்பற்றினர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தல் செம்மரங்களை துண்டு துண்டாக வெட்டி வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை வழியாக கடத்தல்காரர்கள் காரில் கொண்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆவடி அருகேயுள்ள பொத்தூரில் நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்று நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் கார் நின்ற இடத்திற்கு போலீஸார் விரைந்தனர். அப்போது போலீஸ் வருவதைக் கண்ட சிலர் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற காரை சோதனை செய்து பார்த்ததில், அதில் கடத்தல் செம்மரங்கள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸார், காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், காரில் இருந்து தப்பிச்சென்றவர்கள் கடத்தல்காரர்கள் என்பதையும் உறுதி செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.