குற்றம்

”சூட்கேஸில் என்னஇருக்கு?” திறந்துபார்த்த ரயில்வே ஆபிசர்களுக்கு ஷாக்! காட்பாடியில் பரபரப்பு

webteam

காட்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் 35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான காவலர்கள் (நேற்று இரவு) விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது பி3 கோச்சில் சந்தேகத்திற்கு இடமாக சூட்கேசுடன் இருந்த கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த அனந்த நாராயணனிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

பின்னர் அவரிடம் இருந்த சூட்கேசை சோதனை செய்த போது அதில் உருக்கிய நிலையிலும், நகைகளாகவும் தங்கம் மற்றும் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதற்க்கு எந்தவிதமான உரிய ஆவணமும் இல்லாததால் சுமார் 2 கிலோ 728 கிராம் தங்கம், 35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த இரயில்வே காவலர்கள். அனந்த நாராயணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் நகை வியாபாரி என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பணம், பிடிப்பட்ட அனந்த நாராயணனை ரயில்வே காவல்துறையினர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் தொடர்ந்து ஆனந்த நாராயணனிடம் வருமான வரி துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடியே 34 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் காட்பாடி ரயில் நிலையத்தில் சிரிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.