வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேல்நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் ஹரிகேஷ் துளசி. இவர்கள் வீட்டின் எதிரே, அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் சாமியார் மடம் ஒன்று அமைத்து, அதைக் கடந்த 10 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார். அங்கு 7 அடியில் ஒரு தண்ணீர் தொட்டி அமைத்து அதில் ஆமையை வளர்த்தும், ரூபாய் நாணயங்கள் போட்டும் வைத்துள்ளார்.
மேலும் மாதந்தோறும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சாமியார் மடத்தில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள், உள்ளிட்ட பரிகாரங்களையும், இரவு நேரங்களில் உடம்பில் துணி இல்லாமல் தண்ணீர் தொட்டி மேல் நின்று பூஜை செய்து வருவதாகவும், வீதியில் சுற்றி திரிவதாகவும் குழந்தையின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முருகனும், மகாலட்சுமியும் நேற்று முன்தினம் காலை கூலி வேலைக்கு சென்றனர். இரவு 7 மணிக்கு வேலை முடிந்து பெற்றோர் வீடு திரும்பினர். அப்போது, குழந்தை ஹரிகேஷ் வீட்டில் இல்லாததால் பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால் பெற்றோர் பதற்றமடைந்தனர்.
இருப்பினும், சாமியார் மடத்தின் எதிரேயுள்ள தண்ணீர் தொட்டி அருகே சென்று பார்த்தபோது, தொட்டி மேல்பக்கம் கீற்றுக்கொட்டகையால் மூடப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அதில் ஹரிகேஷ் நீரில் மூழ்கி சடலமாக கிடந்தான். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
உடனே, அங்கு திரண்ட பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் இறங்கி சடலமாகக் கிடந்த ஹரிகேஷை மீட்டனர். பிறகு சாமியார் ரவியை தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. தண்ணீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்திருந்தால், தொட்டி எப்படி மேல்பக்கமாக மூடப்பட்டிருக்கும் என்பதால் சந்தேகமடைந்த குழந்தையின் உறவினர்கள், சிறுவனை சாமியார் ரவி நரபலி கொடுத்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். மேலும், நேற்றிரவு சந்திரகிரகணம் என்பதால், சாமியார் ரவி சிறப்பு யாகம் நடத்த உள்ளதாக சிலரிடம் தெரிவித்ததால் அவர் சிறுவனை நிச்சயமாக நரபலி தான் கொடுத்திருக்க வேண்டும் என எண்ணிய ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாமியார் மடத்தை சூறையாடினர். மேலும் தொட்டியில் இருந்த ஆமையை தூக்கி வெளியே வீசினர். அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தலைமறைவான சாமியார் ரவியை பல இடங்களில் தேடினர். ஆனால், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தலைச்ச குழந்தை என்பதால் உறவினர்கள் அருகில் உள்ள மயானத்தில் எரித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குழந்தை ஹரிகேஷ் நரபலி கொடுக்கப்பட்டாரா? அல்லது குழந்தையின் கழுத்தை இறுக்கி தொட்டியில் வீசினரா? என அப்பகுதி மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.