குற்றம்

முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக புகார்: குஜராத்தில் இருந்த பாஜக பிரமுகர் கைது

webteam

சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றியும், திமுக தலைவர்கள் பற்றியும் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்ததாக எழுந்த புகாரில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா, குறிச்சியைச் சேர்ந்தவர் அரசு வழக்கறிஞர் ராஜசேகர். இவர் ”சென்னையில் வசித்து வரும் ஜான் ரவி தனது சமூக வலைதளங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் படத்தை வைத்து தமிழக முதல்வரை ஸ்டாலினை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். எனவே ஜான் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பந்தநல்லூர் போலீசில் கடந்த 22 ஆம் தேதி புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பந்தநல்லூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து குஜராத்தில் இருந்த ஜான் ரவியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஜான் ரவி தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதும். இவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என்பதும். பாஜக பிரமுகர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது கைது நடவடிக்கையைக் கண்டித்து கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு, பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் டிஎஸ்பி அலுவலக வாசலில் ஆர்பாபட்டம் செய்தனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி-யிடம் பாஜக நிர்வாகிகள் பேசினர். ஜான் ரவி கைது தொடர்பாக உரிய தகவல் கிடைத்ததும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என டிஎஸ்பி கூறியதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.