குற்றம்

’ஒரு பூஜை போட்டால் சரியாகிடும்’ நீதிபதி, அவரது மகனை கொன்ற வழக்கில் சிக்கிய பெண் மந்திரவாதி

EllusamyKarthik

மத்தியபிரதேசத்தில் நீதிபதி ஒருவரும், அவரது மகனும் விஷம் கலந்த சப்பாத்தியை சாப்பிட்டு உழிரிழந்த வழக்கில் ஒரு பெண் மற்றும் மந்திரவாதி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பெத்துல் மகேந்திர திரிபாதி. அங்குள்ள சிந்த்வாரா மாவட்ட கூடுதல் நீதிபதியாக அவர் பணியாற்றி வந்தார். தனது இரண்டு மகன்கள் மற்றும் மனைவியோடு அங்கு வசித்து வந்துள்ளார். 

நீதிபதி திரிபாதிக்கு சந்தியா சிங் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. சந்தியா சிங் பலரது கஷ்டங்களையும் போக்க வழி சொல்பவர். நம் ஊர் பக்கங்களில் உள்ள சாமியாடி போல. 

இந்நிலையில் நீதிபதி திரிபாதியிடம் ‘உங்கள் வீட்டு கஷ்டங்களை போக்க ஒரு பூஜை போட்டால் சரியாகிடும்’ என சொல்லியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பிய நீதிபதியும் பூஜைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

பின்னர் கடந்த இருபதாம் தேதியன்று பூஜை செய்துள்ளார் சந்தியா சிங். அதோடு நீதிபதியிடம் கோதுமை மாவை கொடுத்து ‘இது பூஜையில் வைத்து படைத்தது, அதனால் வீட்டில் உள்ள எல்லோரும் சாப்பிட வேண்டும்’ என சொல்லியுள்ளார். 

அதனை நம்பிய நீதிபதியும் அன்று இரவே அந்த கோதுமையை கொண்டு வீட்டில் சப்பாத்தி செய்து எல்லோரும் சாப்பிட்டுள்ளனர். இதில் அவரது  மனைவி மட்டும் சப்பாத்தி சாப்பிடாமல் இருந்துள்ளார். 

நீதிபதி மற்றும் அவரது இரண்டு மகன்களும் சப்பாத்தியை சாப்பிட்ட சில மணி நேரங்களில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்களை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நீதிபதியும், அவரது மூத்த மகனும் இறந்துள்ளனர். உடனடியாக இதனை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளது. 

பலகட்ட விசாரணைக்கு பிறகு தற்போது நீதிபதி சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருப்பது கண்டறியப்பட்டு அதனை அவருக்கு கொடுத்த சந்தியா சிங், ஒரு மந்திரவாதி என மொத்தமாக ஆறு பேரை கைது செய்துள்ளது காவல் துறை.