குற்றம்

சிவகங்கை யானை தந்தத்தை கடத்தி விற்க முயற்சி – 3 பேர் கைது

webteam

சிவகங்கை அருகே யானை தந்தத்தை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலுக்கு பெங்களூரிவில் இருந்து யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக சிவகங்கை வனத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் தலைமையிலான வனக் காப்பாளர்கள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மானாமதுரையைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திருப்பூரைச் சேர்ந்த ஜெயக்குமார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் பாண்டியன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காளையார் கோவில் மணியங்குடி கண்மாயில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி மதிப்புள்ள யானை தந்தத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.