குற்றம்

சிவகங்கை: மருந்துக் கடையில் மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது

kaleelrahman

காரைக்குடியில் டி ஃபார்ம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்ததாக போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கலைமணி நகரில் சுகன்யா என்பவர் டி பார்ம் மட்டுமே படித்துவிட்டு மருந்து கடை நடத்தி வந்ததோடு மருத்துவமும் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரனுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

உத்தரவின் அடிப்படையில், மருத்துவ இணை இயக்குனர் இலுப்பக்குடிக்கு வந்து மருந்துக்கடை பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், சுகன்யா மருந்து கடையின் உள்பகுதியில் கிளினிக் வைத்து, அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக கடையை மூடி சீல் வைக்கப்பட்ட நிலையில், சுகன்யா மீது காரைக்குடி அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.