குற்றம்

'சேட்டை செய்ததால் அடித்தேன்' - 5 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அக்கா கைது

கலிலுல்லா

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் 5 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் அவனது அக்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த சூசை மேரி என்பவர், தமது இரண்டு குழந்தைகளை பெருங்களத்தூரில் உள்ள அக்கா மகளான மேரியிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார். திடீரென 5 வயதான ஆபேல் மயங்கி விழுந்ததாக மேரி தகவல் அளிக்க, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் உடலில் தீக்காயம், நகக் கீறல், உள்காயங்கள் இருந்ததால், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பினர். அப்போது, தலையில் ரத்தம் உறைந்ததால் சிறுவன் உயிரிழந்தது உடற் கூராய்வில் தெரியவந்தது. இதனால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த காவல்துறையினர், சிறுவனின் அக்கா உறவு முறையான 20 வயதான மேரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுவன் சேட்டை செய்ததால் தாக்கியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.