குற்றம்

5 வயது சிறு குழந்தையை அடித்து துன்புறுத்தும் தாய்... வைரல் வீடியோவில் அதிர்ச்சி சம்பவங்கள்

நிவேதா ஜெகராஜா

புதுச்சேரியில் ஐந்து வயது பெண் குழந்தையை தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த தாய்க்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி காவல்துறையின் (IRBN) பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ் என்பருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சாந்தி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு வர்னிகா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 6 மாதங்களும் முன்பு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். தனித்து வாழ்ந்து வரும் இவர்களுக்கு நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கணவனை பிரிந்து சாந்தி, தனது தாய் மற்றும் மகள் வர்னிகாவுடன் வசித்து வருகிறார். அப்படி வாழும் சாந்தி, சமீபத்தில் தனது குழந்தையை மோசமாக அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சியொன்று, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், குழந்தையை மீட்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். காண்போரையும் பதைபதைக்கவைக்கும் அந்த வீடியோ, குழந்தை நல ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.