குற்றம்

17 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி!

webteam

நீலகிரி மாவட்டத்தில் 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியுடன் பழகிய, ஆண்டனி வினோத் என்ற நபர், திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மாணவி கருவுற்றதால், மாத்திரைகளை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். இவ்வாறு பல முறை தொடர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆண்டனி வினோத்தை கைது செய்தனர். உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், நீதிபதி அருணாசலம் நேற்று தீர்ப்பளித்தார். 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகள், கருக்கலைப்பு செய்ததற்கு 20 ஆண்டுகள், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 4 ஆண்டுகள் என மொத்தம் 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.