குற்றம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் மஞ்சள் பறிமுதல்: 6 பேர் கைது

kaleelrahman

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 1.5 டன் மஞ்சள் மற்றும் படகை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து திருட்டுத்தனமாக நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படவிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் சரக்கு வாகனத்திலிருந்து நாட்டு படகில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், 1.5 டன் மஞ்சளை சட்டவிரோதமாக தூத்துக்குடியிலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் படகில் இருந்த 1.5 டன் மஞ்சள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் லோடு வேனையும் கைப்பற்றினர்.