cellphone theft
cellphone theft file image
குற்றம்

புதுச்சேரி: வேலியே பயிரை மேய்ந்த கதை.. 18 போன்களோடு எஸ்கேப் ஆன செக்யூரிட்டி!

PT WEB

புதுச்சேரியை சேர்ந்த சேதராபட்டு பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், தொழிற்சாலைக்குள் செல்லும் முன், செல்ஃபோன்களை பாதுகாப்பாக செக்யூரிட்டி அறையில் வைத்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி, கடந்த 19ம் தேதி அன்றும், செல்போன்களை செக்யூரிட்டி அறையில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, வேலை முடிந்து மாலை வந்து பார்த்தபோது, 18 பேரின் செல்போன்கள் மொத்தமாக காணாமல் போனதை கண்டு அதிர்ந்துள்ளனர்.

அத்தோடு, பாதுகாப்புக்காக அங்கிருந்த செக்யூரிட்டியும் காணாமல் போன நிலையில், சந்தேகமடைந்த தொழிலாளர்கள், தொழிற்சாலையில் மேலாளரிடம் சொல்லி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்கினர். அப்போது, காணாமல் போன செக்யூரிட்டி பாண்டியராஜன் மூன்று தினங்களுக்கு முன்பாக பணியில் சேர்ந்தது தெரியவர, அவர்தான் திருட்டு வேலையில் ஈடுபட்டார் என்றும் கண்டுபிடுத்துள்ளனர். தொடர்ந்து, திருடுபோன செல்போன் எண்களை டிராக் செய்து பார்த்தில் பாண்டியராஜன் திண்டிவனத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

சொந்த ஊருக்கு செல்ல திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு சென்ற பாண்டியராஜனை மடக்கிப்பிடித்த போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், புதிதாக திருமணமான பாண்டியராஜன், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, செக்யூரிட்டி வேலைகளில் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஏற்கனவே சென்னையில் திருடிய 5 போன்கள், தற்போது திருடப்பட்ட 18 போன்களை பறிமுதல் செய்த போலீஸார், பாண்டியராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.