குற்றம்

சென்னையில் கார் மூலம் மூட்டை மூட்டையாக கடத்தப்படும் குட்கா... வாகன சோதனையில் அம்பலம்!

webteam

செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில், சென்னை சவுகார்பேட்டையில் இருந்து குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை இரண்டு கார்களில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு தாலுகா போலீசார், சென்னேரி அருகே சம்மந்தப்பட்ட கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அதில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாகனத்தை இயக்கி வந்த சிறுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முருகப்பன் (50), சங்கர் (43) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து கார்களில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 57 கிலோ எடை கொண்ட குட்கா போதை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்