குற்றம்

மாணவியை ஆபாசமாக படம் எடுத்த ஊழியர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த பள்ளி முதல்வர்!

webteam

திருவேற்காட்டில் பள்ளி மாணவியை ஆபாசமாக படமெடுத்து வைத்திருந்த தனியார் பள்ளி ஊழியர், பள்ளி முதல்வரின் புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக அயனம்பாக்கத்தை சேர்ந்த சசிகுமார் (என்ற) எட்வின் (21) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், தினமும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பேசி கொண்டிருப்பதை பார்த்த பள்ளியின் முதல்வர், சந்தேகத்தின்பேரில் அந்த நபரிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்துள்ளார்.

அப்போது சசிகுமார் தன் செல்போனில் சிறுமியின் ஆபாச படங்களை வைத்திருந்தது அவருக்கு தெரியவந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருகிலிருந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளியின் முதல்வர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் சசிகுமாரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், பள்ளியில் பயிலும் மாணவியை ஆபாசமாக அந்நபர் செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தது உறுதியானது. இதையடுத்து சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.