குற்றம்

உத்தர பிரதேசம்: பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

Veeramani

உத்தர பிரதேச மாநிலத்தில் பராபங்கி மாவட்டத்தில் மீண்டும் ஒரு பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டம் சத்ரிக் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் பயிர்களை வெட்டுவதற்காக வயலுக்குச் சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இறந்து கிடந்த அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதையும், அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாகவும் அப்பெண்ணின் தந்தை மற்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

விவசாய வயலில் இறந்து கிடந்த இந்த இளம்பெண்ணின் கழுத்தை நெரிப்பதற்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோளிட்டு போலீசார் இன்று தகவல் தெரிவித்தனர். கழுத்தை நெரிப்பதற்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.எஸ்.கவுதம் தெரிவித்தார். “பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் சத்ரிக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்படும், மேலும் சந்தேகநபர்கள் சிலர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றும் அவர் கூறினார்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலின இளம்பெண் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள், மீண்டும் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.