குற்றம்

”சத்யா சாகணும்னு நான் நினைக்கல” - கொலையாளி சதீஷ் கொடுத்த வாக்குமூலம்

webteam

சென்னையில் கல்லூரி மாணவி சத்யாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ், மாணவியை கொலை செய்தது ஏன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார். சத்யா கொலையில் கைது செய்யப்பட்ட சதீஷை, காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

சதீஷ் கொடுத்த வாக்குமூலம்!

காவல்துறை விசாரணையில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், சத்யாவுடன் பழகுவதை பிடிக்காத அவரது தாயார் சத்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்ததாகவும், இதன் காரணமாக சத்யா தன்னிடம் சரிவர பேசவில்லை எனவும் தெரிவித்தார்.

சதீஷ் மேலும் கூறியிருப்பதாவது, சத்யா ஒருபோதும் தான் படிக்கவில்லை என்பதற்காகவோ ஒழுங்கான வேலைகளுக்கு செல்லவில்லை என்பதற்காகவோ பணம் சம்பாதிக்கவில்லை என்பதற்காகவோ கோபித்துக் கொண்டதே இல்லை என்றும் சத்யா இறந்து போவர் என்று நான் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சதீஷ் வீட்டில் அவரது அறையில் அறை முழுவதுமாக சத்யாவின் பெயரை எழுதி வைத்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் நடந்தது என்ன?

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்திய பிரியா என்ற மாணவியை சதீஷ் என்பவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டு படுகொலை செய்தார். இந்த சம்பவம் அக்டோபர் 13 ஆம் தேதி மாலையில் நடைபெற்றது. உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் கொலையாளி சதீஷை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சதீஷ் ஏற்கனவே மூன்று முறை சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்காததால், இந்த கொலை காரணமாக அமைந்துள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தது..

குறிப்பாக கடந்த மே மாதம் மாம்பலம் காவல் நிலையத்தில் சத்யாவை கல்லூரியில் தாக்கியது தொடர்பாக சதீஷ் மீது சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டது முதல் தகவல் அறிக்கை மூலம் வெளியானது. இதனை அடுத்து கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.