குற்றம்

ஒரு லட்சம் தந்தால் 15 சவரன் நகை: சதுரங்கவேட்டை பாணியில் நடந்த மோசடி!

webteam

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை. ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். ஏமாறுபவர்களின் கதைகள் மட்டும் முற்றுப்புள்ளி இல்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. மோசடி நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் இது. இதற்கேற்ப, மக்களின் ஆசையை தூண்டிவிட்டு ஏமாற்றுவலை விரித்திருக்கிறார் இந்த நபர். கிருஷ்ணதாஸ், கிறிஸ்துதாஸ், கிருஸ்து மூர்த்தி என பல பெயர்களில் வலம் வந்த இவர், சென்னை மதுரவாயல் பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை குறிவைத்து மோசடி செய்துள்ளார். பெண் பிள்ளைகள் உள்ள குடும்பங்களே இவரது இலக்கு. ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் 15 சவரன் நகை, மாதம் ஐந்து சவரன் வீதம் 3 மாதத்தில் 15 சவரன் நகை கொடுப்பதாக ஆசைவார்த்தி காட்டி, கிருஸ்துதாஸ் இந்த பணமோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அரும்பாக்கம், வடபழனி-ஆற்காடு சாலைகளில் 'மனம்' என்ற பெயரில் நகைக்கடைகள் திறந்து, அவ்வப்போது ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்தி கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை தனது திட்டத்திற்குள் இழுத்த கிறிஸ்துதாஸ், ஏறக்குறைய 7 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்கவே தனது அலுவலகங்களை மூடிவிட்டு தலைமறைவானார். இதையடுத்து 6 மாதங்களுக்கு முன் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தந்தனர். இந்தச்சூழலில், அண்ணாநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது, பாதிக்கப்பட்டவர்களே மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் இவரை ஒப்படைத்துள்ளனர். இனி தங்கள் பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் மக்கள்.