செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் ஆலங்கிணறு காலணி பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவன் - அருளம்மாள் தம்பதியர். இவர்களுக்கு அந்தோணிராஜ் மற்றும் காசிவேல் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அண்ணன் தம்பிக்கு இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்று அந்தோணிராஜ் அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய தம்பி காசிவேல் மற்றும் அவரது மனைவி இசக்கியம்மாள் மகன் பரத், தாயார் அருளம்மாள் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்து.
இதில் காசிவேல் மற்றும் மூன்று பேரும் சேர்ந்து அந்தோணிராஜை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில். அந்தோணிராஜ் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அருகே இருந்தவர்கள் அந்தோணிராஜை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே காசிவேல் என்னையும் என் அண்ணன் தாக்கினான் என்று சாத்தான்குளம் மருத்துவமனையில் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அப்போது மருத்துவமனையில் இரண்டு குடும்பத்திற்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. அறிந்து அங்கு சாத்தான்குளம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக்காக அண்ணனை கொலை செய்த தம்பி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.