குற்றம்

சமயபுரம்: கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகளை திருடிய பெண் கைது - 67 சவரன் மீட்பு

webteam

சமயபுரம் கோயில் அருகே நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் தாலியை பறித்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், 67 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம், உறையூர் அருகே மருதாண்ட குறிச்சி ராமநாதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாவி (76). இவர், தனது மனைவி சரஸ்வதியுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பேருந்தில் சென்றுள்ளனர். இதையடுத்து பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர்கள், கோவிலை நோக்கி நடந்து சென்றுள்ளனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம பெண் ஒருவர் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த ஆறே முக்கால் பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி கூட்டத்தில் மறைந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி உடனடியாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் நின்ற சமயபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து உடனே அந்தப் பகுதி கடைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய போலீசார், விசாரணையை தீவிர படுத்தியதோடு, கோவில் பகுதியில் அந்தப் பெண்ணை சமயபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கைதான அந்தப் பெண் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செல்லியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி ரேகா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆறேமுக்கால் பவுன் நகையும் மீட்டனர். அதேபோல், மண்ணச்சநல்லூர், நெ.1 டோல்கேட், லால்குடி, சமயபுரம் போன்ற பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகளை திருடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள இவர் கொள்ளையடித்த 67 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.