குற்றம்

புதுச்சேரி: தனியார் பைப் தொழிற்சாலையில் ரூ. 17 லட்சம் கையாடல் - விற்பனை மேலாளர் கைது

புதுச்சேரி: தனியார் பைப் தொழிற்சாலையில் ரூ. 17 லட்சம் கையாடல் - விற்பனை மேலாளர் கைது

Sinekadhara

புதுச்சேரியில் தனியார் பைப் தொழிற்சாலையில் 17 லட்சம் ரூபாய் கையாடல் செய்த விற்பனை மேலாளரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள கலிதீர்தால்குப்பம் திருக்கனூர் சாலையில் உள்ளது அகர்வால் பைப்ஸ் என்ற தனியார் பிளாஸ்டிக் பைப் மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் சதீஷ் (43). இவர் கடந்த மாதம் 28 ஆம் தேதி, திருபுவனைக் காவல் நிலைத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் தனது தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் விற்பனை மேலாளர் மேசக் என்பவர் ரூபாய் 17 லட்சத்தை கணக்கில் காட்டாமல் ஏமாற்றி வருவதாகவும், அப்பணத்தை மீட்டு தருமாறு தனது புகார் மனுவில் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து விசாரணை செய்த திருபுவனை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மேசக்கை பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில், அவரது செல்போன் சிக்னல் மூலம் மேசக் திருச்சி அன்பு நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகளை பல்வேறு ஊர்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்து அந்த பணத்தை கம்பெனியின் கணக்கில் காட்டாமல் தன் குடும்ப செலவிற்காக செலவு செய்துவிட்டதாகவும், தற்போது பணம் எதுவும் இல்லை என்றும் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மேச்க்கை புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்குத் தொடர்பாக மேசக் வேறு யாரிடமாவது பணத்தை கொடுத்து வைத்துள்ளாரா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.