கைது கோப்புப்படம்
குற்றம்

சேலம் | மாணவர்கள் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை - 5 பேர் கைது

ஓமலூர் வட்டாரத்தில் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் கஞ்சா விற்பனையை தடுத்து, விற்பனையாளர்களை கைது செய்யுமாறு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சிறப்பு கஞ்சா தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஓமலூர் டிஎஸ்பி சிறப்பு தேடுதல் குழு போலீசார் கஞ்சா விற்பனை பற்றிய தகவல்களை சேகரித்தனர்.

Ganja

அப்போது சேலம் மாநகர எல்லையைச் சேர்ந்த இளைஞர்கள் ஓமலூர் வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது. அவர்களை கண்காணித்து ஓமலூர் கோட்டகவுண்டம்பட்டி வீரா, கிருபாகரன், ஓமலூர் ரவி பிரசாந்த், சேலம் நெத்திமேடு ஜெயவேல், சேலம் தாகூர் நகர் புவனச்சந்திரன் ஆகியோரை விற்பனை செய்தபோது வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர். இவர்கள் கிராமப்புற மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், யார் யார், எங்கெங்கு விற்பனை செய்கிறார்கள் என்று விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை பெற்றுள்ளனர். தொடர்ந்து 5 பேரையும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கஞ்சா விற்பனை குறித்து ஓமலூர் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.