குற்றம்

5 லட்சம் மதிப்புள்ள 8 செம்மரங்கள் பறிமுதல்: தமிழகத்தை சேர்ந்தவர் சித்தூரில் கைது

webteam

செம்மரக் கட‌த்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சித்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மவுரவபள்ளி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மவுரப்பள்ளி பகுதியில் செம்மரக் கடத்தல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே கேட் அருகே செம்மரங்களை வெட்டி சுமந்து வந்தவர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்று உள்ளனர். 11 பேர் தப்பியோடிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் நம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் மட்டும் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமண செலவுகளுக்காக செம்மரம் வெட்ட வந்ததாக சவுந்தரராஜன் விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் அவரிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.