குற்றம்

விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது

kaleelrahman

விராலிமலையில் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணதாசன் என்பவரின் மகன் முத்துக்கருப்பன். எம்பிஏ பட்டதாரியான இவர், டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.

இதனையறிந்த விராலிமலை சக்திநகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முத்துக்கருப்பனை தேர்ச்சி பெற வைத்து கிராம நிர்வாக அலுவலர் பணி வாங்கித் தருவதாக கூறி கண்ணதாசனிடமிருந்து ரூ. 4 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், இதுநாள்வரை வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கண்ணதாசன், விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.