குற்றம்

”கன்னத்தில் அறைந்த ரவுடி”- 6 மாதம் கழித்து ரவுடியின் கன்னத்தையே வெட்டி எடுத்த நபர்

webteam

கன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தையே வெட்டி எடுத்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நங்கநல்லூர், பிவி.நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த ராபின் ராஜா(24). இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரபாகரன் கன்னத்தில் அறைந்தது மட்டுமன்றி அடிக்கடி வீண் விதாண்ட வாதங்களை செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராபின் ராஜா, பிரபாகரனை கடந்த 10ம் தேதி இரவு பேச்சுவார்த்தைக்கு வரவழைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு 11ம் தேதி காலை அப்பகுதி பொது மக்கள் தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தது யார் என கண்டறிய பழவந்தாங்கல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ், பன்னீர் செல்வம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் ராபின் ராஜாவிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் “ முன் விரோதம் காரணமாகவும், தனது உறவினர் ஒரு பெண்ணுடன் பிரபாகரன் தவறான தொடர்பு வைத்திருந்தாகவும் அதனை கைவிட பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால் அவரை நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து பம்மலை சேர்ந்த ஆகாஷ்(22), பிரபு(22), நங்கநல்லூரை சேர்ந்த ஒளிவராஜா(21), பார்த்திபன்(21), ராஜ்குமார்(21), பல்லாவரத்தை சேர்ந்த அருண்(21), ஆகிய 7 பேரை கைது செய்த பழவந்தாங்கல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அனைவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.