குற்றம்

சென்னை: திமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

நிவேதா ஜெகராஜா

சென்னையில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். 102 -வது வட்ட திமுக அவைத்தலைவரான இவர், கடந்த ஆகஸ்டு மாதம் 18-ம் தேதி இரவு அண்ணா நகர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை வழிமறித்த சிலர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். அதைத்தொடர்ந்து அண்ணா நகர் போலீசார் இந்த வழக்கைப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கீழ்பாக்கத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன் குமார், விநாயகம், இவரது மனைவி கற்பகம், பாலாஜி, அரது மனைவி அமிர்தம் ஆகிய 8 பேரை கைது செய்து காவலர்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

போலீஸ் இன்பார்மராக இருந்து வந்த சம்பத்குமார், கடந்த சில நாட்களுக்கு முன் தான் வசிக்கும் பகுதியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பதுங்கி இருந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்க அவர் கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரவுடியின் உறவினர்கள் சம்பத் குமாரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடி லெனின் என்பவரை தற்போது அண்ணாநகர் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ரவுடி லெனின் மீது காஞ்சிபுரத்தில் 4 கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவரது கூட்டாளிகள் 2 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.