குற்றம்

நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த ரவுடிகள்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

webteam

போரூரில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த இரண்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

போரூரையடுத்த பாரதியார் தெரு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தினேஷ் (23), இவரது நண்பர் முகமது அஜீம் (22) இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், நுங்கம்மாக்கம் தனிப்படை போலீசார் இந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கத்திகள், ஒரு கிலோ கஞ்சா மற்றும் ஐந்து நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதே இடத்தில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தினேஷின் நண்பரான குள்ளகுமார் (21), என்பவரை 2 மாதத்திற்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் வைத்து தனசேகர் என்பவரது கும்பல் கொலை செய்ததாகவும், அதற்காக தனசேகரை பழி வாங்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து சமயம் பார்த்து இருவரும் காத்திருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், தினேஷ் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் முகமது அஜீம் மீதும் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போரூர் போலீசாரிடம் ஆஜர்படுத்தி நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஐந்து நாட்டு வெடிகுண்டுகளையும் பாதுகாப்பான முறையில் போலீசார் எடுத்து சென்றனர். அந்த வீட்டைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.