குற்றம்

கேபிள் ஆபரேட்டர் வெட்டிக்கொலை: மர்ம நபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்

kaleelrahman

நாமக்கல் அருகே கேபிள் டிவி ஆபரேட்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியை அடுத்துள்ள உத்திரகிடி காவல் ஊராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக இருந்தவர் பெருமாள். திமுகவை சேர்ந்த இவர், அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். இந்நிலையில் பெருமாள் நேற்று தனது பணிகளை முடித்துவிட்டு வெட்டுக்காடு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெருமாளை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றனர்.

பெருமாளின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததை அறிந்த பெருமாளின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சேந்தமங்கலம் ராசிபுரம் சாலையில் வெட்டுக்காடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேளுக்குறிச்சி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இக்கொலைக்கான காரணம் இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.