குற்றம்

 ராசிபுரம்: முந்திரி லாரி கடத்தல்; முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 7 பேர் கைது

 ராசிபுரம்: முந்திரி லாரி கடத்தல்; முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 7 பேர் கைது

kaleelrahman

ராசிபுரம் அருகே தூத்துக்குடியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.10 கோடி மதிப்பிலான முந்திரி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக முன்னாள் தொழிலாளர்நலத் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலையில் இருந்து 12 டன் எடை கொண்ட 1.10 கோடி மதிப்பிலான முந்திரி லோடு ஏற்றிக்கொண்டு, தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி டிரைவர் ஹரி என்பவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி லாரியை மடக்கி லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் ஓட்டுநர் ஹரி தனது மேலாளர் ஹரிகரனிடம் தகவல் தெரிவிக்க, அங்கு விரைந்து வந்த ஹரிகரன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தூத்துக்குடி எஎஸ்பி சந்தீஸ்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் லாரியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மர்ம கும்பல், லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவியை நீக்கிவிட்டு லாரியை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கடத்தப்பட்ட லாரி தூத்துக்குடியில் இருந்து நாமக்கல் நோக்கிச் செல்வதை தனிப்படையினர் அறிந்துள்ளனர். பின்னர் லாரியை காவல் துறையினர் பின்தொடர்வதை தெரிந்த கடத்தல் கும்பல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சாலையில் நின்ற காரில் இருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரித்தபோது கடத்தலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப் பாண்டியன் மகன் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன், மாரிமுத்து ராஜ்குமார், செந்தில்குமார் மற்றும் பாண்டி, உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.