குற்றம்

ராணிப்பேட்டை: குடிபோதையில் தாக்கவந்த கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி

webteam


வாலாஜாபேட்டை அருகே குடிபோதையில் தாக்கவந்த கணவரை, மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் கிராமம் வடமேட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை - கலைச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்த ஏழுமலை; அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் ஏழுமலைக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே தகராறு நடப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்றிரவு ஏழுமலை, அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மனைவி கலைச் செல்வியை திட்டியதோடு அடித்தும் உள்ளார். இதனால் தன்னை தாக்க வந்த ஏழுமலையை, தற்காப்பிற்காக அருகில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தில் கலைச்செல்வி வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், ஏழுமலையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். தற்காப்பிற்காக கணவனை கத்தியால் வெட்டியதில் அவர் உயிரிழந்ததாக கலைச்செல்வி ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து கலைச்செல்வியை கைது செய்த போலீசார், கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஒழுகூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது