குற்றம்

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த காவலர்.. 23 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை

webteam

போலியான சாதி சான்றிதழ் மற்றும் தந்தை பெயரை மாற்றி காவல்துறை பணியில் சேர்ந்த காவலர் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் போலியான சாதி சான்றிதழ் மற்றும் தந்தை பெயரை மாற்றி போலியான ஆவணங்கள் தயார் செய்து, கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி அபிராமம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது பணியிட மாறுதலும் பதவி உயர்வும் பெற்று மதுரையில் தலைமைக் காவலராக பணி செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரது மோசடி செயல் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக எண்ணிற்கு புகார் வந்துள்ளது. இதனை தொடர்ந்து எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில், காவலர் முருகனிடம் நடத்திய விசாரணையில் மோசடி உண்மையென்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பணியில் சேர்ந்து கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து, அவர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.