தமிழக ரயில்வே
தமிழக ரயில்வே File Image
குற்றம்

சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து 2 பீகார் தொழிலாளர்கள் தள்ளப்பட்டார்களா? ரயில்வே போலீஸ் விளக்கம்!

PT WEB

சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து குற்றவாளிகளால் பீகாரை சேர்ந்த இரண்டு நபர்கள் தள்ளப்பட்டதாகவும், அதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியானது. ஒரு பீகார் நியூஸ் சேனல் இந்த செய்தியை வெளியிட்டதை அடுத்து, விவகாரம் பெரியதாக மாறியது.

இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட ரயில்வே போலீஸார், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை!

சென்னையில் உண்மையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாக என்பது குறித்து பேசிய ரயில்வே போலீஸார், “பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சென்னையில் குற்றவாளிகளால் ஓடும் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் காரணமாக ஒரு தொழிலாளி இறந்துவிட்டார். மற்றவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்ற பொய் செய்தியை பீகார் செய்தி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தொழிலார்கள் முதலில் தாக்கப்பட்டதாகவும், அதற்கு பின்னர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்டதாகவும், பின்னர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட பிறகு, சென்னையில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும், வதந்தியை பரப்பிய செய்தி சேனல் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆந்திரா அருகே கூடூர் என்ற பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து ஒரு நபர் உயிரிழந்ததாகவும் அதுகுறித்து ஆந்திராவில் கூடூர் பகுதியில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தமிழக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.