குற்றம்

கஞ்சா விற்பனை செய்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கைது

கஞ்சா விற்பனை செய்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கைது

நிவேதா ஜெகராஜா

புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனை செய்ததாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்(33). இவர், புதுக்கோட்டை நகராட்சியில் 23-வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கடந்த 13-ஆம் தேதி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி முன்பு கார்த்திக் என்ற இளைஞர் சிகரெட்டில் வைத்து கஞ்சாவை வைத்து புகைத்தது தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது தனக்கு பெரியார் நகரில் உள்ள தற்போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் அப்துல் மஜீத் கஞ்சா விற்பனை செய்வதாக கூறி உள்ளார்.

இதனையடுத்து போலீசார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் மஜீத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவரிடமிருந்து 5 கிராம் உள்ள 40 கஞ்சா பாக்கெட் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து அப்துல் மஜீத் கைது செய்த போலீசார் அவரது நண்பர் முரளி என்பவரையும் கைது செய்து புதுக்கோட்டை நகர காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அருணாலபுரம் பகுதியில் வசிக்கும்
சர்மா(20), கன்னிமார்கோவில் தெருவைச் சேர்ந்த நரேந்திரகுமார்(27), முருகன்கோவில் தெருவைச் சேர்ந்த கதிர்வேல்(34), காந்தி நகரைச் சேர்ந்த மியாகனி(22) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், 2 தராசுகள், 4 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் மஜீத் உட்பட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.