குற்றம்

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பால் சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை

kaleelrahman

இன்ஸ்டாகிராம் மூலம் நட்புடன் பழகி வந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தேனூரைச் சேர்ந்த பள்ளி சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலம் திருநள்ளாறு அடுத்த நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்த நந்தா எனும் நந்தகுமார் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு தனது நண்பன் ராம்குமார் மூலம் சிறுமியை அழைத்து வர செய்து அதே பகுதியில் ஆள் அரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று நந்தகுமார், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் திருநள்ளாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த நந்தகுமார் மற்றும் அவனது கூட்டாளி ராம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த திருநள்ளாறு போலீசார், சிறுமியை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நந்தகுமார் மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த திருநள்ளாறு போலீசார், அவர்களை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.